கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில், நேற்று அதிகாலை இடம்பெற்ற கொலையின், சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அயல் வீட்டுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சந்தேக நபர் இன்று பொலிசாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொலை இடம்பெற்ற வீட்டாருடன் தனக்கு வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டதாகவும், அதனால் தன்னை தாக்கியமையினால், அவமானம் பொறுக்க முடியாமல், நேற்று அதிகாலை 1.30 மணியளவில், அவர்களின் வீட்டுக்குள் புகுந்து, கம்பி ஒன்றினால் இளைஞனை தாக்கியதாகவும், இதனை அவரது தாயார் பார்வையிட்ட நிலையில், அவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும், பொலிசாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்னம் ஜெசிந்தன் மற்றும் அவரது குழுவினர், குற்றத் தடகவியல் பொலிசார், சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக, சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றை இறைத்து சோதனை செய்த போது, இறந்தவரின் கைத்தொலைபேசி ஒன்றும், கொலை செய்யப் பயன்படுத்திய கம்பி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

அத்துடன், மேலதிக விசாரணைகளின் பின்னர், நாளையதினம் சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தவுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (சி)

Previous articleஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே இராணுவத்திற்கு அறிவிக்கப்படவில்லை
Next articleநாட்டின் பாதுகாப்பு 100 வீதம் உறுதி : ரணில்