ஆலையடிவேம்பில் இருந்து இடமாற்றப்பட்ட மலேரியா தடை இயக்கப்பிரிவை மீண்டும் ஆலையடிவேம்புடன் இணைக்க வேண்டும் என பல சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் ஆலையடிவேம்பில் பல்வேறு சமூக மட்ட கூட்டங்களின் போது ஆராயப்பட்டுவருவதுடன் இதற்கான தீர்வு கிடைக்காவிடின் விரைவில் மக்களுடன் இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஆரம்பகாலம் முதல் இயங்கிவந்த மலேரியா தடை இயக்கப்பிரிவானது அன்மையில் எவ்வித காரணமுமின்றி பிறிதொரு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ் இடமாற்றமானது ஆண்டின் ஆரம்ப கால பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியிடம் கேள்வி எழுப்பியபோது, கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளரின் கோரிக்கை கடிதத்திற்கு அமையவே இவ் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்விடுவிப்பு தற்காலிகமானது எனவும், ஆனால் கால எல்லையை குறிப்பிட முடியாது எனவும், மாற்றப்பட்ட பிரிவிற்கு பதிலாக பிறிதொரு பிரிவை ஆலையடிவேம்பிற்கு அவர் வழங்குவதாக தமக்கு அறிவுறுத்தல் வழங்கியதாகவும்; குறிப்பிட்டார்.
ஆனாலும் அவ்வாறான எந்தவொரு பிரிவும் இதுவரையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது.
இதேவேளை குறித்த பிரிவை மாற்றுவதற்காக கடந்த காலத்தில் பல முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் முயற்சியால் அவை தடுக்கப்பட்டன.
தற்போது பாராளுமன்ற உறுப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் புதிதாக ஆலையடிவேம்பு சுகாதார பணிமனையினை பொற்றுப்பேற்ற வைத்திய அதிகாரி குறித்த பிரிவை விடுவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பொது அமைப்புக்களால் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் நடமாடும் சேவையின் நிமித்தம் அப்பிரிவு கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எழுத்து மூலமான அறிக்கையினை சம்மந்தப்பட்டவர்களிடம் கோருமாறு பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்நிலையில் மலேரியா தடை இயக்கப்பிரிவானது ஆலையடிவேம்பிற்கு அருகில் உள்ள அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)









