இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐநா சமாதான சபையின் விசேட பிரதிநிதி கிளெமென்ட் நைலெட்சோசி வோல் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது, வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்கத்துடனும் இணைந்து மாகாணத்தினுள் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த முன்னெடுக்கும் நிலம், நீர், நிதி மற்றும் நீதி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா விசேட பிரதிநிதிக்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விளக்கமளித்தார்.

அத்துடன், காணியற்ற மக்களுக்கு காணிகளையும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினை வழங்குவதற்கு வடமராட்சி களப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் தான் செயற்பட்டு வருவது தொடர்பில் ஆளுநர் ஜ.நா பிரதிநிதியிடம் கருத்துக்களை முன்வைத்தார்.

இதேவேளை இலங்கையில் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் தடைப்பட்டிருந்த பாதுகாப்பு படைகளின் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிப்பது தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனையும் ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleஅர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை : அடுத்த மாதம் அறிவிப்பு
Next articleவல்வெட்டித்துறையில் கஞ்சா மீட்பு!