நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 07 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலனிலைக்கு 08 மாவட்டங்களை சேர்ந்த 4,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையால் 08 வீடுகள் முழுமையாகவும் 703 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

அக்கரப்பத்தனை – டொரிங்டன் தோட்டத்தில் ஆற்றில் அள்ளுண்டு இரு சிறுமிகள் உயிரிழந்த அதேவேளை, ஹட்டன் கினிகத்தேன நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (நி)

Previous articleகிராமசக்தி மக்கள் கருத்திட்டம்:முல்லைத்தீவுக்கு மூன்றாமிடம்!
Next articleபங்களாதேஷ் அணிக்கு எதிராக 22 பேரைக்கொண்ட குழாம் அறிவிப்பு