இந்திய உதவிகள் சலுகை நிதியத்தின் கீழ், மஹோவில் இருந்து ஓமந்தை வரை 130 கிலோ மீற்றர் புகையிரத பாதையை மேம்படுத்துவதற்கான, 91.26 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம். இந்திய ஐர்கொன் இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில், இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளின் பின்னர், முதன் முறையாக இந்த புகையிரத பாதையை மேம்படுத்தும் பணிகள் இடம்பெறுகின்றன.
சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கும், நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கவுள்ள, இந்திய ஐர்கொன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையில், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையிலான புகையிரத பாதை, 1904 ஆம் ஆண்டிலேயே நிர்மாணிக்கப்பட்டது.
அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரை 1905 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது, அன்று முதல் இன்றுவரை மிகப்பெரிய முதலீட்டுடன், புகையிரதப் பாதைகள் அமைக்கப்படாத நிலையில், தேவையான பகுதிகளில் புகையிரத பாதையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், நிர்மாணப் பணிகளை பொறுப்பேற்றிருக்கும் நிறுவனத்தின் அதிகாரிகள், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அமைச்சர் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகள், கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிகத்துறையின் அதிகாரி சூஜா கே.மேனன், இலங்கை புகையிரத திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். (சி)









