இறுதி யுத்தம் தொடர்பில், முள்ளிவாய்க்கால் தமிழர் சாட்சியமாக, தமிழ் மக்களுக்காக பல்வேறு வழிகளிலும் குரல் கொடுத்து வந்த, அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார், நேற்று இறைபதம் அடைந்துள்ளார்.
ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் மறைவு தொடர்பில், தமிழர் மரபுரிமைப் பேரவை இரங்கல் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட, முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் உச்சம் தொட்ட கொடூரங்களில் ஒன்றான, வலைஞர்மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து, அத்தாக்குதலின் இரத்த சாட்சியமாக, இறுதி வரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த, அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் நேற்று இறைபேறடைந்தார் என்ற செய்தி, தமிழ் இனத்தை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
1996 இல், முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டு, முல்லைத்தீவு நகரையும் சூழ இருந்த கிராமங்களையும் சேர்ந்த மக்கள், அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர்மிக்க நாட்களில், அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர், முல்லைத்தீவின் பங்குத்தந்தையாக பொறுப்பெடுத்தார்.
உட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்ட நிலையில், சிங்கள ஏகாதிபதியத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கும் முகம் கொடுத்துக்கொண்டு, மீள்குடியேறிய இம்மக்களுக்கு, மதம் கடந்து பல்வேறு மனிதாபிமான பணிகளையும் உதவிகளையும் செய்து, அம்மக்களின் நேசிப்பை பெற்றார்.
2004 இல், முல்லைத்தீவை கொடூரமாகத் தாக்கிய சுனாமியின் போது, தெய்வாதீனமாக உயிர் தப்பிய இவர், சுனாமியால் அனைத்தையும் இழந்து போன அம்மக்களுக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன.
மதம் கடந்த இவரின் அன்பு செலுத்தல், அனைத்தும் மக்களையும் இவர்பாலீர்த்தது.
2009 இல் முள்ளியவாய்க்காலில் தமிழர் இன அழிப்பு உச்சம் தொட்ட நாட்களில், சிங்கள இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட வலைஞர்மடம் தேவாலயத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலில் காயமடைந்து, முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் இரத்த சாட்சியமாக, இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்தவர்.
தமிழ் மக்களின் விடுதலை போராட்ட வரலாற்றில், தலைமையாலும் தளபதிகளாலும் போராளிகளாலும் நேசிக்கப்பட்ட மகத்தான மனிதம் ஒன்று, இன்று எம்மிடையே இல்லை.
அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு, எமது இறுதி அஞ்சலிகளை செலுத்தி நிற்கின்றோம்.
என தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. (சி)





