யாழ்ப்பாணம் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில், பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளில், 27.5 ஏக்கர் காணிகள் பொது மக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

யுத்த காலத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணிகளை, மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டும் என்ற, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் ஒத்துழைப்போடு விடுவிக்கப்படும் காணிகள் தொடர்பான ஆவணங்கள், ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதுடன், ஆளுநர் அதனை யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரனிடம் வழங்கினார்.

2015 ஆண்டு முதல் இன்று வரை, யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகளில், 2 ஆயிரத்து 963 ஏக்கர் காணிகள் பொது மக்களிடம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். (சி)

Previous articleஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணிப்பயன்பாட்டு குழுக்கூட்டம்!
Next articleஅரசை வலுப்படுத்திய ஜே.வி.பி : வாசுதேவ