மன்னார் – கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போன நிலையில், நேற்று ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்தித்துறையை சேர்ந்த 19 வயதுடைய தர்ஷன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் அதே இடத்தைச் சேர்ந்த 28 வயதுடைய செந்தூரன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மீனவர்கள் கோந்தை பிட்டி கடலில் தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர்.
இதன் போது படகில் வெளி இணைப்பு இயந்திரத்தை இணைந்து படகை செலுத்தி பார்த்துள்ளனர்.
இதன் போது குறித்த படகில் மீனவர்கள் உட்பட 8 பேர் இருந்துள்ளனர்.
படகின் வெளி இணைப்பு இயந்திரம் திடீரென இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது.
இதன் போது காற்றின் காரணமாக படகு கடலில் சென்று கொண்டிருந்தது. இதன் போது படகின் முன் அணியத்தில் நின்ற ஒருவர் திடீரென கடலில் வீழ்ந்து கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றைய மீனவர் அவரை காப்பாற்ற கடலில் குதித்துள்ளார்.
எனினும் குறித்த மீனவரும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டநிலையிலேயே, இரு மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மன்னார் கடலில் காணாமல்போன இரண்டாவது பருத்தித்துறைவாசியும் சடலமாக மீட்பு!
