முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில், கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ், 75 கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டமெங்கும், கட்டாக்காலி கால்நடைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும், மக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பிரதேச சபையினால், 75 கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான கட்டாக்காலி கால் நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும், பிரதேச சபை ஊழியர்கள் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தொடர்வதாகவும், கால்நடை வளப்போரும் பொது மக்களும், குறித்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், பிரதேச சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில், கடந்த 6 ஆம் திகதி, வீதிகளில் கட்டாக்காலிகளாக நின்ற 75 கால்நடைகளை, புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் பிடித்து, பிரதேச சபையில் கட்டிவைத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில், வீதிகளில் நிக்கும் கட்டாக்காலி கால்நடைகளால் விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன், விவசாய செய்கைக்கும் கால்நடைகள் பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளன.
வீதிகளில் உள்ள கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு, பல தடவைகள் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், கடந்த 6 ஆம் திகதி அன்று, 75 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிடிக்கப்பட்ட கால்நடைகளுக்கு, கால்நடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து தண்டம் அறவிடப்படும் என, பிரதேச சபையினர் அறிவித்தனர்.
பெரிய மாடு ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாவும், சின்ன மாடு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாவும், ஒரு நாள் பராமரிப்புக்காக இருநூறு ரூபாவும் என அறிவிக்கப்பட்டதுடன், கால்நடை வளர்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளை கட்டி வளர்க்குமாறும், பிரதேச சபையினர் அறிவித்தனர்.
இதேவேளை, முள்ளியவளை பிரதேச சபை சுகாதார ஊழியர்கள், சுகாதார பணிசெய்து கொண்டிருந்த போது, நான்கு பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி அன்று, முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய முன்பக்க வீதியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில், முள்ளிவளை பிரதேச சபையின் உப அலுவலக சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டிருந்த வேளை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல், நீங்கள் தானே மாடு பிடிக்கிறீர்கள் என தெரிவித்து, பிரதேச சபை ஊழியர்களின் காட்டுக்கத்தியை பறித்து எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், முள்ளியவளை பிரதேச சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியமை, பணிக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அச்சுறுத்தியமை தொடர்பில், முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில், பிரதேச சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய, கடந்த 4 ஆம் திகதி, இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தினர்.
இவர்களை, கடந்த 5 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.பரஞ்சோதியின் வாசல்தலத்தில் முன்னிலைப்படுத்திய போது, நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு பேரையும் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு, நீதிபதி, பொலிசாருக்கு பணித்துள்ளார்.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில், தாம் மேற்கொள்ளும் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு, பண்ணையாளர்களும் பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, பிரதேச சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleகிளிநொச்சியில் உபாய முறை மூலோபாயத் திட்ட செயலமர்வு!
Next articleமன்னாரில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here