இலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் உருவாக்கப்படுவதானால் கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த சிஙகள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லி வைக்க விரும்புகின்றோம் என ரொலோ அமைப்பின் பொதுச் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற பொதுபலசேனா அமைப்பின் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ரெலோ அமைப்பு விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையிலேயே, செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய அடிப்படைவாத சவால்களுக்கு எதிரான இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும்சாட்டில் கலப்படமற்ற சிங்கள-பௌத்த பேரினவாதம் விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கின்றது.
1956 இல் முன்வைக்கப்பட்ட சிங்கள இராச்சிய வெறிக்கூச்சல்தான், 30 வருடகால உள்நாட்டு யுத்தத்திற்கு இறுதியில் அடிகோலியது என்பதனை மறந்து மீண்டும் பேரினவாதம் அரசியல் அரங்கை ஆக்கிரமிக்க துடித்து நிற்கின்றது.
இலங்கை தீவில் இன-மத சமத்துவத்திற்கு இடமில்லை என்பதை இந்த பேரினவாத ஆதிக்க சக்திகள் பிரகடனப்படுத்தியுள்ளன.
இச் சந்தர்ப்பத்தில் கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினையில் பௌத்த சிங்கள மதவெறிச் சக்திகளின் தலையீட்டை இருகரம் நீட்டி வரவேற்ற சில தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு சில சமூக அமைப்புக்களும் இப்பொழுது என்ன செய்யப்போகின்றார்கள் என்றும், ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா கேள்வி எழுப்பியுள்ளார். (சி)






