மன்னார் சாந்திபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலை அதிபர், மன்னார் வலயக் கல்வி பணிமையினால், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி, இன்று காலை 7.00 மணி முதல் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் இணைந்து, பாடசாலைக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பாடசாலைக்கு முன் ஒன்றுகூடிய, சாந்திபுரம், ஜீவநகர், ஜிம்ரோன் நகர் கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பாடசாலை அதிபரின் இடமாற்றம் தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், பாடசாலை நலன் புரிச்சங்க உறுப்பினர்கள் என்ற அடிப்படையில், தங்களிடம் எந்த ஒரு கருத்துக்களையும் கேட்காது, இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும், எனவே குறித்த இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யும் வரை, பாடசாலை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றையதினம், பாடசாலை பொறுப்புக்களை ஒப்படைத்து, மாற்றம் பெற்றுச் செல்ல வருகை தந்த அதிபரையும், பெற்றோர்கள் பாடசாலை வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பாக, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்தார்.

இதேவேளை, மன்னார் நகர சபை உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு சென்று, மக்களிடம் கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

அத்துடன், இடமாற்றம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட, பாடசாலை நலன் புரிச்சங்கத்தினருடன் கலந்துரையாடி, ஆலோசனைகள் பெற்ற பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபரை, மீள நியமிக்கும் வரை தங்கள் போரட்டத்தை கைவிடப்போவதில்லை என, பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். (சி)

Previous articleஇலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரிக்கை கையளிப்பு
Next articleஸ்ரீ.சு.க உறுப்பினர்களும், வடக்கு ஆளுநரும் சந்திப்பு