வவுனியா பூவரசன்குளம் சந்தியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி, இன்று காலை ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தியுள்ளனர்.
பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதி பல ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படவில்லை எனவும், பல போராட்டங்களை மேற்கொண்டும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை காலமும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்த தட்டான்குளம், சண்முகபுரம், வாரிக்குட்டியூர், கங்கன்குளம், மணியர்குளம், செட்டிகுளம், பூவரசங்குளம் ஆகிய ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஆட்சியாளர்களே செட்டிகுளம் பூவரசங்குளம் வீதியை உடனடியாக புனரமைத்துக்கொடு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்திற்கு வழியேற்படுத்திக்கொடு, எமது பிரதேசத்திலுள்ள நோய்வாய்ப்பட்டவர்களை மரணப் பொறியில் தள்ளாதே, நாம் இருப்பது வரிப்பணம் செலுத்துவதற்கு மட்டுமா?, அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்கள் எமக்குப் பயணிப்பதற்கு சீரான பாதைகள் இல்லை போன்ற பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டனர். (நி)
போராட்ட இடத்திற்குச் சென்ற வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உறுப்பினர் ஆர்.எச்.உபாலி சமரசிங்கவிடமும், பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடமும் தமது மகஜரினைக் கையளித்து போராட்டத்தினை நிறைவு செய்துள்ளனர்.
இதனால் அப்பகுதி வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். (நி)











