அரசியல் நோக்கம் கருதி, அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணத்துடன், அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தம் தொடர்பில், தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் அரசாங்கம் மீது சுமத்தப்பட்டு வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இனவாதத்தை கொண்டு வந்து அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இப்போது அமெரிக்காவை முன்நிறுத்தி மக்களை அச்சப்படுத்த வைக்கின்றனர்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட மற்றும் சமூகத்தில் ஒதுங்கியிருந்த சிலர், இப்போது பாராளுமன்றத்திற்குள் வர எத்தணிக்கின்றனர்.
பல இடங்களில் தற்போது நிதி திரட்டுவதோடு வெளிநாடுகளிலும் நிதி திரட்டுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை வைத்து இன்று பலரும் வியாபாரங்களை ஆரம்பித்திருக்கின்றனர்.
அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தமானது, சந்திரிகா அம்மையாரின் 1994 ஆம் ஆண்டு ஆட்சியின் போது செய்து கொள்ளப்பட்டதாகும்.
எமது அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை செய்யவில்லை என்பதோடு மாற்றியமைக்கவும் இல்லை.
அதுபற்றி கலந்துரையாடலையே நடத்துகின்றது.
விசேடமாக இங்கே அமெரிக்கப் பிரஜை குற்றம் செய்தால், அதனை அமெரிக்காவில் விசாரிப்பது குறித்த திருத்தத்திற்கு நாங்கள் உடன்படிவில்லை.
அமெரிக்காவின் சோபா ஒப்பந்தம் குறித்து அதீத அச்சத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், எமக்கும் அந்த ஒப்பந்தத்திற்கும் தொடர்பில்லை.
அதேபோல எக்ஸா ஒப்பந்தமானது, 2007 ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான அமெரிக்கப் பிரஜை கோட்டாபய ராஜபக்சவும், அப்போதைய அமெரிக்கத் தூதுவரான ரொபர்ட் ஓ பிளேக்கும் இணைந்து கைச்சாத்திட்டனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த இருவர், அன்று இலங்கை தொடர்பான ஒப்பந்தத்தை செய்த போது எவரும் வாய் திறக்கவில்லை.
இப்போது திருத்தத்தை மேற்கொள்ளவே நாங்கள் செய்கின்றோம்.
இன்று நடிகர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என சிலர் இந்த ஒப்பந்தம் குறித்து தவறாக சித்தரிக்கின்றனர்.
அடுத்ததாக மில்லேனியம் செல்லேஞ்ஜ் கோர்பசேஷன் என்கிற ஒப்பந்தத்தின் ஊடாக, 480 மில்லியன் டொலர் நன்கொடை கிடைக்கின்ற சந்தர்ப்பம் உள்ளது.
இந்த அனைத்து விடயத்தையும் வைத்து, நாட்டை விற்கின்ற குழுவாக எம்மை அடையாளப்படுத்துகிறார்கள்.
அரசியல் ரீதியாக அதிகாரத்தைப் பெறுவதற்காக தங்களது பெற்றோரையும் விற்பனை செய்கின்ற சிந்தனை
அவர்களுக்கு இருப்பதால் இவ்வாறு செயற்படுகின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)






