தடை செய்யப்பட்ட சஹ்ரான் ஹஷிமீன், தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன், கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால், நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 29 ஆம் திகதி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, மருதமுனையை சேர்ந்த ஏ.எச்.நில்ஷாத் எனும் நபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது கைது விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட மனு, இன்று கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது, பொலிஸ் சார்பில் ஆஜரான அப்துல்ஹை, குறித்த நபர் மீதான வழக்கை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்னெடுப்பதற்கான காரணம் எதுவும் இல்லை என அறிவித்ததை தொடர்ந்து, அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அதற்கான நியாயங்களை முன்வைத்து வாதிட்டனர்.
அவற்றை செவிமடுத்த நீதிவான், சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு முடிவுறும் வரை, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, கல்முனை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என, சந்தேக நபரைப் பணித்ததுடன், வெளிநாட்டு பயணங்களுக்கும் தடையுத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன், வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் சார்பில், சட்டத்தரணி எம்.ஏ.எம்.முபீத் தலைமையில் சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.(சி)






