மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்வி நிலைமை தொடர்பான சூழ்நிலைப் பகுப்பாய்வும் கல்வி அபிவிருத்தியினை திட்டமிடல் தொடர்பான நிகழ்வு இன்று புதன்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மண்முனை தென் மேற்கு கோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாவட்ட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் தற்போதய கல்வி நிலைமை தொடர்பாகவும் கல்வி அபிவிருத்தியினை உயர்த்தும் பொருட்டு எதிர்கால திட்டமிடல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன்,
மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று ஆகிய மூன்று கோட்டங்களிலும் தரம் 5 மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்துவதற்காக மூன்று நிலையங்கள் அமைத்து விஷேட கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் கல்வி நிலை பின்தங்கியுள்ளதற்கு பிரதான காரணமாக ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
இங்கு ஆரம்பப்பிரிவில் 76 ஆசிரியர்களும் இடைநிலைப் பிரிவில் 80 ஆசிரியர்களுமாக 156 ஆசிரியர்கள் வெற்றிடமாகவுள்ளது.
இதேபோன்று எமது வலயத்தில் உட்கட்டமைப்பு, சுகாதாரம் போன்ற வசதிகளையும் ஏற்படுத்தும்பொருட்டு தேவைப்பாடுகள் உள்ளது.
நாம் எதிர்காலத்தில் இவ் வலயத்திலுள்ள மாணவர்களின் கல்வி மட்டத்தினை உயர்த்துவதற்காக சிறந்த வளவாளர்களை பெற்று வகுப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம் இதற்கு உதவுவதற்கு சமூக நலன் சார்ந்த அமைப்புக்கள் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.(மா)