மீண்டும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றாத வகையில், அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என, மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா ஹட்டனில் ஆலயங்களுக்கு உதவி வழங்கி, பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

நான், கடந்த 4 வருட காலப்பகுதியில், எவ்வித பாகுபாடுமின்றி கோயில்கள், கிறிஸ்தவ தேவலயங்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் என எல்லாவற்றிக்கும் நிதி ஒதுக்கியிருக்கிறேன்.

அது பௌத்த மதமாக இருந்தாலும் சரி, இந்து மதமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி, நான் வேறாக பார்ப்பது கிடையாது. ஏனென்றால் எல்லா மதங்களும் நன்மையை தான் போதிக்கின்றன.

நான் இங்கு முதன் முதல் வந்த போது, முன்னாள் நகர சபைத் தலைவர் இந்த ஆலயத்தின் கூரையை புனரமைத்து தருமாறு கூறினார். நான் அதனை செய்து கொடுத்தேன்.

அதனைத்தொடர்ந்து முன்னால் உள்ள முற்றத்தில் கற்கள் பதிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.
அதனையும் குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளேன். எதிர்காலத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

காரணம் ஒரு சிலர் செய்யும் தவறுகளால், நாம் எல்லோரையும் ஒரே மாதிரி பார்த்துவிட முடியாது.

நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற வன்செயல்கள் காரணமாகத்தான், தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசினார்கள்.

அதேபோன்று, இன்று நடந்துள்ள சம்பவத்திற்கும், ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் குற்றச்சாட்டினோம் என்றால், அதனை செய்த துரோகிகளுக்கு சாதகமாகி விடும்.
ஆகவே நாம் ஒருபோதும் அதனை செய்து விடக்கூடாது.
இந்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவினர், மிகவும் கவனமாக செயப்பட்டார்கள். நாம் அவர்களுக்கு ஒத்தாசை வழங்க வேண்டும். அப்போது அவர்கள், எங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அது வசதியாக இருக்கும். அதனால் நாம் பல சிக்கல்களில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.
உங்களுக்கு தெரியும், கடந்த குண்டு வெடிப்பில் 250 ற்கும் மேல் இறந்துள்ளார்கள். 500 ற்கும் மேல் காயமடைந்துள்ளார்கள்.

இவ்வாறன சம்பவங்கள் மீண்டும் ஏற்படாது தடுப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சின், 35 இலட்சம் ரூபா செலவில், நுவரெலியா ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில், இன்டர் லொக் கற்கள் பதித்து புனரமைக்கப்படவுள்ள முற்றம், மற்றும் ஹட்டன் நீக்ரோதாராராம விகாரையில், சுமார் 28 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள தர்சாலையின் கூரை ஆகியவற்றின் பணிகள், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் நிகழ்வுகள், பொஸ்கோ விடுதிக்கு பொறுப்பான அருட்தந்தை குரூஸ் சேவியர் அடிகளார் தலைமையிலும், நீக்ரோதாராராம விகாரையின் விகாரதிபதி தர்சனபதி மஹாகம விமல தேரர் தலைமையிலும் நடைபெற்றன.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்பட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து, பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ராம், ஹட்டன் டிக்கோயா நகர சபை முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினமான அழகு முத்து நந்தகுமார், அமைப்பாளரும் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவருமான நகுலேஸவரன் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். (சி)

Previous articleடின்சின் மண்டபம் பிரதேச செயலகமாக மாற்றம் : மக்கள் எதிர்ப்பு
Next articleமரண தண்டனைக்கு ஆதரவு வழங்க முடியாது : ரணில்