முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
அசல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு அழைக்கப்பட்டுள்ளது.
இதன்போது வழக்கை எதிர்வரும் ஜூலை 26ம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம் சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு அன்றைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மீளாய்வு மனு அழைக்கப்பட்ட போது இரு தரப்பினரும் தங்களது எழுத்துமூல அறிக்கையை மன்றில் சமர்பித்தனர்.
“எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தான் உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு இலஞ்ச ஊழல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், அதன் காரணமாக தான் உள்ளிட்ட 08 பிரதிவாதிகளை விடுவிக்குமாறும் விடுத்த கோரிக்கையை நீதவான் நீதிமன்ற நீதிபதி நிராகரித்து தீர்ப்பளித்ததாகவும், இதனால் அந்த தீர்ப்பை செல்லுபடியற்றதாக்க கோரி மேல் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்படது.
இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மறுஆய்வு மனுவை விசாரிக்காமல் மேல் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றின் தீர்ப்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகிய இரண்டும் சட்டவிரோதமானது என்றும் தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவே இன்றையதினம் விசாரணைக்கு வந்ததுடன், எதிர்வரும் ஜூலை 26ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.(சே)








