முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், குற்றப் புலனாய்வுத்துறையினர் வைத்தியசாலையில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை, இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், சுகயீனம் காரணமாக, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக, குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.(மா)






