ஷரியா பல்கலைக்கழகத்தினை அரசாங்கம் சுவீகரித்து இராணுவத்தின் தொழில்நுட்ப கல்லூரியாக மாற்றம் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள அவரது விகாரையில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல தெற்காசியா முழுவதுக்குமான இஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கான பல்கலைக்கழகமாக ஷரியா பல்கலைக்கழகம் அடையாளம் இடப்பட்டுள்ளது. உள்நோக்கத்தை மறைத்து தொழில்நுட்பக் கல்லூரியினை அமைக்கப்போவதாக கடந்த அரசாங்கத்திடமிருந்து காணியினை பெற்றுக் கொண்டதன் பின்னர் இஸ்ஸாம் அடிப்படைவாதத்திற்காக இந்த பல்கலைக்கழகத்தினை அமைத்துள்ளனர். அரேபிய மொழி மற்றும் ஷரியா நீதி போன்றவற்றினை கற்பிப்பதற்கு ஷரியா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் இஸ்லாம் தீவிரவாதத்தினை போதிக்கின்ற பல்கலைக்கழகமாகவும், தற்கொலைக் குண்டுத் தாரிகளை உருவாக்குகின்ற பல்கலைக்கழகமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று இதனை அமைப்பதற்காக பல கோடிக்கணக்கான பணத்தினை வழங்கியிருக்கின்றது. உரிய அனுமதிகள் இல்லாது அமைக்கப்பட்டுவரும் இந்த பல்கலைக்கழகத்தினை அமைப்பதற்கு பணம் வழங்கியமை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.
உங்களுக்கு தெரியும் சவுதி அரேபிய நாடுகளில் உள்ள பெரும் செல்வந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் வேறு நாடுகளில் இஸ்லாம் தீவிரவாதிகளை அடிப்படை வாதிகளை உருவாக்குவதற்கு பாரியளவிலான நிதியினை வழங்கி வருகின்றனர். அரபி மொழி, ஷரியாநீதி போன்றவற்றை கற்பித்து இலங்கை முழுவதையும் இஸ்லாம் நாடாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு இந்த பல்கலைக்கழகத்தினை உருவாக்கியிருக்கின்றார்கள். பாக்கிஸ்தான், பங்களாதேஸ் போன்ற பிரதான பௌத்த நகரங்களை கொண்ட நாடுகள் இன்று முழுமையாக முஸ்லீம் நாடுகளாக மாறியிருக்கின்றன. எனவே இந்த ஷரியா பல்கலைக்கழகத்தினை அரசாங்கம் முழுமையாக சுவீகரித்து இராணுவத்தினரின் தொழில்நுட்ப அறிவினை வளர்க்கக் கூடிய குறிப்பாக சைபர் தாக்குதல் போன்றவற்றை தடுக்கக் கூடிய அறிவினை பெற்றுக் கொள்ளும் இராணுவபயிற்ச்சிப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்று தெரிவித்துள்ளார் (மு)






