வேலையில்லா அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடி தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தி, வேலையில்லா பட்டதாரிகள் சங்கம், இன்று பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக, ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையில்லா பட்டதாரிகள், தொடர்ந்து பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர்.
இதன் போது, பேரணி இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த கலகத்தடுப்பு பொலிஸார் மற்றும் பொலிஸார் இணைந்து, வேலையில்லா பட்டதாரிகளின் பேரணி, ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவாத வகையில், லோட்டஸ் வீதியில் இரும்பு வேலிகளை இட்டு தடுத்தனர்.
இதனால், கலகத்தடுப்பு பொலிஸாருக்கும், வேலையில்லா பட்டதாரிகளுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் இடம்பெற்றது.
எனினும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாததை அடுத்து, வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு, பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் என்பவற்றை மேற்கொண்டதனால், அங்கு பதற்றமாக சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யுவதி ஒருவர், மயக்கமுற்ற நிலையில் கீழே விழுந்த சம்பவமும் பதிவாகியது. (சி)