வவுனியா நெடுங்கேணி பட்டைபிரிந்த குளம் பாடசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலை, தொடர்ந்து இயங்கிவந்த நிலையில், யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்தனர்.
தொடர்ந்து குறித்த பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட நிலையில், பாடசாலையில் மாணவர் வரவு குறைந்த நிலையில் காணப்பட்டது.
இதனையடுத்து அப்பாடசாலையினை கற்குளம் தமிழ் கலவன் பாடசாலையுடன் இணைப்பு செய்வதற்கு மாகாண கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் இன்றையதினம் நெடுங்கேணி கோட்டக் கல்வி அதிகாரி கிருபானந்தராஜா பாடசாலைக்குச் சென்றிருந்தார்.
இதன் போது, அவரை இடைமறித்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனையடுத்து பாடசாலையின் உபகரணங்கள் ஏற்றும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனும், நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (சி)





