வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில், பயணிகள் எதிர்நோக்கும் சோதனை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் குறித்து, இன்று ஆராயப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம், இலங்கை போக்குவரத்துச் சபை, சிவில் சமூகப்பிரதிநிதிகள், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில், இன்று கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா பேரூந்து நிலையத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கான பதில்களையும் கலந்துகொண்ட பிரதிநிதிகள் முன்வைத்திருந்தனர்.
எனினும் இன்றைய கலந்துரையாடலில், வன்னி மாவட்ட பிரதம போக்குவரத்துப் பணிப்பாளர் கலந்து கொள்ளவில்லை.
அத்துடன், பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் வாரத்தில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து, பேரூந்து நிலையத்திலுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்து, மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பேரூந்து நிலையப் பகுதியில் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்கள், வெளி மாவட்ட பேரூந்துகளை பேரூந்து நிலையத்திற்குள் அனுமதிப்பது, பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வெளி மாவட்ட பேருந்துகள் தரித்து நிற்பது குறித்தும், கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பேரூந்து நிலையப் பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில், பொது மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்தும், அவர்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய கலந்துரையாடலின் போது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷன, பிராந்திய அலுவலக சட்டத்தரணியும் விசாரணை அதிகாரியுமான ஆர்.எல்.வசந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். (சி)