வட மேல் மாகாண ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட நியமிக்கப்பட்டமை தொடர்பாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில், சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன் பத்திரண, உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொழும்பில், 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் தொடர்புபட்டிருக்கக் கூடிய வசந்த கரன்னகொட, அதற்காக சிறையில் இருக்க வேண்டுமே தவிர, உயர் அதிகாரத்தை வழங்கும் பதவிகளுக்கு நியமிக்கப்படக் கூடாது என, த்யாகி ருவன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், இலங்கையைப் பொறுத்தமட்டில், குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பிப்பது மாத்திரமன்றி, அவர்களுக்கு முக்கியமான உயர் பதவிகளும் வழங்கப்படும் என்ற விடயம் நினைவுறுத்தப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பவானி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி, இந்த நியமனம், தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் போக்கு மற்றும் அதிகரித்த இராணுவ மயமாக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருப்பதுடன், அரசியல் ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் காண்பித்து வரும் அலட்சியப் போக்கு குறித்த தெளிவான செய்தியையும் வழங்கியிருக்கிறது என, பவானி பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
வசந்த கரன்னகொடவின் நியமனத்துக்கு சர்வதேச செயற்பாட்டாளர்கள் அதிருப்தி!
