யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படத்துமாறு கோரி, இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில் காயமடைந்த ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்றிரவு 7.20 மணியளவில், வைத்தியசாலையின் பின்புற மதில் மேலாக ஏறி குதித்து உள்ளே நுழைந்த ரவுடிக்கும்பல் ஒன்று, ஆண்கள் விடுதிக்குள் நுழைந்ததுடன், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது.

இதனை வைத்தியசாலை ஊழியர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.

உடனடியாக வைத்தியசாலை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து தாக்குதலை தடுக்க முற்பட்டனர், இதன் போது, பொலிசார் மீதும் ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.

ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நிலத்தில் வீழ்த்தி தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு இலக்கான நோயாளி, தலையில் பலத்த அடிவிழுந்த நிலையில், ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், வைத்தியசாலை பணியாளர்கள், தாதியர்கள், வைத்தியர்கள் அனைவரும், இன்று வைத்தியசாலையின் முன்பான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயுதம் ஏந்திய பொலிசாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தி, வைத்தியசாலையினதும், நோயாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். (சி)

Previous articleசிறுபான்மை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் : நவீன்
Next articleநுவரெலியா மருத்துவமனையை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு!