யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், குடும்ப தகராறு காரணமாக, கணவன் மனைவியை கத்தியால் குத்தியதில், மனைவி ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் சென் றொக் வாசிகசாலைக்கு அருகாமையில், நேற்று நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்தில் 3 பிள்ளைகளின் தாயாரான, 40 வயதுடைய ஜே.யு.பொலினியா என்பவர் உயிரிழந்துள்ளார்.
கணவன் மனைவியுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குடும்ப தகராறின் காரணமாக, நேற்று தகராறு அதிகரித்த வேளை, கணவன் மனைவியின் வயற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதன் காரணமாக, மனைவி படுகாயமடைந்த நிலையில், அயலவர்களினால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனையடுத்து, கணவர் தலை மறைவாகியிருந்த நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், கணவனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கணவரான ஜோச் எமிலியாம்பிள்ளை என்பவரை, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.(சி)





