யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி முன் இடம்பெற்ற வீதி விபத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொட்டடி பகுதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் நடந்து வந்துகொண்டிருந்த மாணவர்களை மோதித்தள்ளியது.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குறித்த முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யுமாறு கோரி சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பட்டதுடன் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதில் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டினர்.
இதனால் ஒரு மணித்தியாலம் குறித்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பொதுமக்கள் வீதியில் இறங்கி பொலிஸாருடன் முரண்பட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி சாரதியை சிசிடிவி கமரா உதவியுடன் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(நி)