மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் அசத்தலாக வெற்றிபெற்றது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு டவுன்டனில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது.

322 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹும் மாத்திரம் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்திருந்தாலும், ஏனைய வீரர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பினை செவ்வனே நிறைவேற்றினார்கள்.

அதன்படி தமீம் இக்பால் 48 (53) ஓட்டத்தையும், சவுமிய சர்கார் 29 (23) ஓட்டத்தையும், பெற்று ஆட்டமிழந்ததுடன், சகிப் அல்ஹசன் 99 பந்துகளில் 16 நான்கு ஓட்டம் அடங்கலாக 124 ஓட்டத்துடனும், லிட்டன் தாஸ் 69 பந்துகளில் 8 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 94 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ரஸல், உஷேன் தோமஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.(சே)

Previous articleமுஸ்லீம் எம்.பி.க்களின் விசேட கூட்டம் இன்று
Next articleஈரானுக்கு எதிராக ம-கிழக்கில் 1000 படைவீரர்கள்!