சிங்கள மக்களோடு சேர்ந்து முஸ்லீம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் துணையாக இருக்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
அரசியல் தீர்வுகளிலே பௌத்த துறவிகள் சம்மந்தப்படும் போதெல்லாம் அரசியல் நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு அது சிங்கள பௌத்த தேசியவாதத்தினுடைய வெற்றியாகத் தான் தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கின்றது என்பதும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினராகிய தமிழ் சமூகம் என்பதும் வரலாறு தந்த பாடம் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட தலைமை காரியாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.