இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை பிளவுபடுத்துகின்ற கருத்துக்களை வெளியிடுவதை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தவிர்த்துக் கொள்ள வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக இராஜினாமா செய்தனர்.
இவர்கள் மிகவும் பிழையான முன்னுதாரணத்தையே வழங்கியுள்ளனர்.
எனவே இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஆரம்பம் என்ன?
இடைநடுவே இந்தப் பிரச்சினையை பிடித்துக்கொள்வதில் பிரயோசனமில்லை.
தெரிவுக் குழுவில் சாட்சியமளித்த சிலர், இந்த 8 பேர் செய்த செயலினால் ஏன் பள்ளிவாசலுக்குள் நுழைகிறீர்கள், ஏன் வீடுகளை பரிசோதனை செய்கிறீர்கள் எனக் கேட்டனர்.
இன்று நாங்கள்தான் பிழை செய்தவர்கள் என்று அவர்கள் கேள்வி கேட்கின்றனர்.
பிரச்சினையின் முடிவை எடுக்க வேண்டாம். ஆரம்பத்தைப் பாருங்கள்.
அவர்களுடைய இனத்தைச் சேர்ந்த அவர்களுடைய மதத்தைப் பின்பற்றுகின்ற இனவாதிகள் 8 பேரின் செயற்பாட்டினால்தான் ஒட்டு மொத்த 20 இலட்சம் முஸ்லிம் மக்களுடைய வீடுகளுக்கு, தினமும் படையினர் வருவதும், பள்ளிவாசலுக்குள் பாதணிகளுடனும், மோப்ப நாங்களுடனும் சோதனைக்கு செல்வதும் இடம்பெறுகின்றன.
அரசாங்கத்தினாலா, தமிழர்களினால் அல்லது சிங்கள மக்களினாலா இது இடம்பெறுகிறது? இல்லை.
தங்களது இனத்தைச் சேர்ந்த இனவாதிகள் 8 பேரினால்தான் இந்த அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.
இன்று கடைகளில் வர்த்தகம் இல்லையென்றால், நம்பகரமாக பயணத்தை செய்ய முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நாங்கள் அல்ல.
பிரச்சினையை முடிவில் எடுத்துக் கொள்ளாமல் ஆரம்பத்தைப் பார்க்க வேண்டும்.
இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை பிளவுபடுத்துகின்ற கருத்துக்களை வெளியிடுவதை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் இலங்கையில் சிறுபான்மையினர் என்றாலும் உலகளவில் பெரும்பான்மையினர் என்று ஹிஸ்புல்லா கூறியிருப்பதை ஊடகங்களில் அவதானித்தேன்.
அவரிடம் மிகவும் தயவுடனும் அன்புடனும் கூறிக்கொள்வது என்னவெனில், அநாவசிய பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற பேச்சுக்களை இந்த நாட்டிற்குள் வெளியிட வேண்டாம்.
உலகில் யார் பெரும்பான்மையினர் என்பது எமக்குப் பிரச்சினையில்லை.
நாட்டிற்குள் நாம் எப்படி இருக்கின்றோம் என்பதையே கவனிக்க வேண்டும்.
இந்த நாட்டிற்குள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு உலகில் யார் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்று என்ற பிரச்சினையை நாட்டிற்குள் கொண்டுவர வேண்டாம்.
மிகவும் சிரமத்துடன் நாங்கள் பயணிக்கின்ற இந்தப் பயணத்திற்கு அது மிகப்பெரிய தடையாகிவிடும்.
ஹிஸ்புல்லா எமது கட்சியின் உறுப்பினர் என்பதோடு எம்முடன் ஒன்றாக அமைச்சராகவும் செயற்பட்ட அதேவேளை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராகவும் இருந்தவர்.
எனவே உலகத்திலுள்ள பிரச்சினைகளை உலகத்துடன் பார்த்துக் கொள்ளுமாறும், நாட்டின் ஐக்கியத்திற்குப் பங்கம் விளைவிக்கின்ற பிரச்சினைகளை பேச வேண்டாம் என்பதை அவரிடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்’ என குறிப்பிட்டுள்ளார்.(சி)






