யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர், வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திருப்பமடைந்து இதயத்தைத் தாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் – இணுவில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞன் உயிரிழந்திருந்தார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (சி)






