கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில், கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடி பொருட்கள், நேற்று கண்டுபிடிக்கப்பட்டன.குறித்த பொருட்கள் தொடர்பில், பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விடயம் தொடர்பில், பளை பொலிஸாரால், கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
அதனையடுத்து, கிளிநொச்சி நீதிமன்றத்தின் அனுமதியுடன், அகழ்வு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்ப்படுகின்றது.
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி உட்பட்ட வெடி பொருட்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வரிச் சீருடை எச்சங்களும், மனித எலும்புக்கூட்டு எச்சங்களும் காணப்படுகின்றன.
அவற்றின் அடிப்படையில், குறித்த பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடையவையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பல மாதங்களுக்கு முன்னர், இதே பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளுடையது என நம்பப்படும் அடையாள எச்சங்களும் சீருடைகளும் மீட்கப்பட்டிருந்தன.
முகமாலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!
