புகையிரத சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
புகையிரதத்தில் பயணம் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையக பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களின் கதவுகள் யாவும் பூட்டப்பட்டிருந்ததுடன், பயணிகள் ஓய்வு அறை, உணவகம் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
புகையிரத திணைக்கள ஊழியர் ஒருவர் கடமை நேரத்தில் மதுபானம் அருந்தி இருந்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு பொது போக்குவரத்து செயலாளர் ஒருவர் அழுத்தம் கொடுப்பதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எவ்வாறான போதிலும் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ள நிலையில், இந்த வேலை நிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)