மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில், கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும், அனுமதிப்பத்திர விதி முறைகளை மீறி கிரவல் மண் அகழ்வு செய்யப்பட்டு வருவதாக பருப்புக்கடந்தான் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மக்களின் வேண்டு கோளுக்கு அமைவாக, நேற்று குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது நீர்பாசன பொறியியலாளரும் சமூகமளித்திருந்தார்.
இதன்போது குறித்த பகுதியில் கிரவல் மண் அகழ்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், அனுமதிப்பத்திர விதி முறைகளை மீறி கிரவல் மண் அகழ்வு செய்யப்படுகின்றமை தொடர்பாக மக்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனால் பல்வேறு வீதிகள் சேதமடைந்துள்ளமை மற்றும், வீதிகள் சேதமடைந்துள்ளமையினால் பஸ் போக்குவரத்துச் சேவைகள் பாதீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
நிலமையை நேரடியாக அவதானித்த நீர்ப்பாசன பொறியியலாளர் குறித்த பகுதியில் அனுமத்திப்பத்திர விதி முறைகளை மீறி மண் அகழ்வு செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக குறித்த பகுதியில் கிரவல் மண் அகழ்வு செய்வதற்கான அனுமதியை இரத்துச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளரிடம் வேண்டு கோள்விடுத்தார். (நி)







