மன்னார் மாவட்டத்தில், வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள, 5 பிரதேசச் செயலக பிரிவுகளிலும், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள, மக்களின் காணிகள் மற்றும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில், எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர், நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பது என, வனஜீவராசிகள் மற்றும் வன
பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஏற்பாட்டில், அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில், மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில், கலந்துரையாடல் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காணிகள், வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின்; கீழ் காணப்படுவதுடன், மக்களின் பயன்பாட்டில் உள்ள காணிகள் பலவும், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளமை தொடர்பாக, வடக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல தடவைகள், நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்துள்ளனர்.
இந்த நிலையில், மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, மாவட்டச் செயலகத்தில், விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இதில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான், கே.திலீபன் ஆகியோரும், மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், இராணுவம், பொலிஸ் மற்றும் விமானப் படை உயர் அதிகாரிகள், வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதன் போது, மாவட்டத்தில் உள்ள, ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள, காணி தொடர்பாக பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பிரதேச செயலாளர்கள், தமது பிரிவில், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்கள கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்தும், குறிப்பாக, மக்களின் பயன்பாட்டில் உள்ள பல ஏக்கர் விவசாய காணிகள், வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின்; கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், அமைச்சர் சி.பி.ரத்நாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் முன்வைக்கின்ற பல பிரச்சினைகளை, உடனே தீர்க்க முடியாத காரணத்தினால், விசேட குழு ஒன்றை நியமித்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர், பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மன்னாரில் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை!







