கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட மரபு, முகப்புத்திர சிற்ப மகா ரதோற்சவம் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை ஒருங்கேகொண்ட பெருமையினையுடைய அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இராமபிரானால் வழிபட்ட ஆலயமாகவும் அனுமான் இலங்கையினை எரித்தபோது வலில் ஏற்பட்ட தீயினை அணைத்த இடமாகவும் கருதப்படும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சம் பத்து தினங்கள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை தம்ப பூஜை,மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று வசந்த மண்டபத்தில் பஞ்சமுக கணபதிக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து மலர் மழை சொரிய அடியார்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் பஞ்சமுக கணபதி உள்வீதி வலம்வந்து வெளிவீதி வந்ததும் இலங்கையில் மிக உயரமான சித்திரத்தேர்களில் ஒன்றான திராவிட மரபு,முகப்புத்திர சிற்ப மகா ரதத்தில் பஞ்சமுக கணபதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்போது தேரடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிழுக்க திராவிட மரபு,முகப்புத்திர சிற்ப மகா ரதோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
நாளை பிதிர்க்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)