தொழில் உரிமை கோரி மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் இன்று காலை தொடக்கம் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதுடன் இன்று பிற்பகல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய வெளிவாரி பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த பட்டதாரிகள் இந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் வரலாற்றில் இந்த தடவையே வெளிவாரி உள்வாரி என பிரித்து நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் அவ்வாறு இல்லாமல் அனைத்து பட்டதாரிகளையும் நியமனங்களுக்குள் உள்வாங்க வேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது காந்திபூங்காவில் இருந்து இன்று பிற்பகல் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு வரையில் ஊர்வலமாக சென்ற பட்டதாரிகள் அங்கு தனித்தனியாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
அரசாங்கம் தமது தொழில் உரிமையை மறுத்துள்ளதாகவும் தமது பட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர். (சி)








