அமைச்சர்களான மங்களசமரவீர ராஜித சேனாராட்ண பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரட்ண ஆகியோர் ஹம்பகா மாவட்டத்தின் விகாரைகளுக்குள் உள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாக ஹம்பகா பௌத்த தேரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஹம்பகா பௌத்த தேரர்கள் சங்கம் நேற்று இரவு நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.
மகாசங்கரத்தின தேரர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் மங்களசமரவீர அமைச்சர் ராஜித சேனாரட்ண அவரது புதல்வர் சத்துர சேனாரட்ண ஆகிய மூவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே இவர்கள் மூவரும் ஹம்பகா மாவட்டத்தில் எந்த விகாரைக்குள்ளும் வளிபாடுகளில் ஈடுபடுவதனை நாம் தடை செய்துள்ளோம். அது மட்டுமல்ல சமய நிகழ்வுகளுக்கும் இவர்களை அழைக்காது இருப்பதற்கும் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் பொதுவான நீதி ஒன்றினை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அனைத்து இனங்களும் சமாதானத்தினுடன் சந்தோசமாக வாழ்வதற்காக மிகவிரைவாக பொது நீதியினை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதனை எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஹம்பகா தேரர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான அழுத்தங்களை ஆட்சியாளர்களுக்கு கொடுப்பதற்கான தீர்மானத்தினையும் சங்கம் ஏகமனதாக நிறைவேற்றி இருக்கின்றது.
எமது நாடு ஒரு சிறிய நாடு சிறிய தீவு இங்கே மேல் நாட்டில் ஒரு நீதியும் முஸ்லீம் மக்கள் திருமணம் முடிப்பதற்கு கல்வி கற்பதற்கு பிறிதொரு நீதியும் இருக்கின்றது. இந்த நாட்டில் அனைத்து இனங்களும் வாழக்கூடிய ஏற்றுக் கொள்ளக் கூடிய பொது நீதி ஒன்றினை செயற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஹம்பகா பௌத்த தேரர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.