
தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடிய விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்
போராட்டத்தை ஜனாதிபதி கொச்சைப்படுத்தியுள்ளார். அவரது இந்த செயற்பாடு தமிழ் மக்களை வெகுவாக பாதிந்துள்ளது என அம்பாரை மாவட்ட் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியின் பயனாக ரன் மாவத் திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமையவுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய வீதியினை காபட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
போதைப்பொருள் விற்று போராட்டம் நடத்தும் அளவிற்கு தலைவர் பிரபாகரன் இருக்கவில்லை. ஓட்டுமொத்த தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதிப்பங்களிப்புடனும் புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடனுமே அவர் போராட்டத்தை முன்னெடுத்தார்.
இந்நிலையில் தமிழ் மக்களினால் கடவுளாக பார்க்கப்பட்ட அவரது போராட்டத்தை கொச்சைப்படுத்தியதானது தமிழ் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளருமான ஆர்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளரும் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக பதவியுர்வு பெற்று செல்பவருமான ரி.கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர்,ரி.சுரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வீதி நிர்மானிப்பிற்கான பெயர்ப்பலகையை திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அதிதிகள் பூஜை வழிபாடுகளின் பின்னர் வீதிக்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தனர்.
இதேவேளை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக பதவியுர்வு பெற்று செல்லும் ரி.கஜேந்திரனை ஆலையடிவேம்பு மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.(சி)









