மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளிக் கிராமத்தில் அமைந்துள்ள பொது நூலகத்திற்கான புதிய வாசகர் வட்டம் ஆரம்பிக்கும் அங்குராப்பண நிகழ்வு இன்று நூலகப் பொறுப்பாளர் சீ.ரவிந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் ம.இளங்கோ, சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சீ.குகநேசன், குருமண்வெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத் தலைவர் செல்வ ரவீந்திரன் உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாதர்சங்க உறுப்பினர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கு மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் அருள் செல்வநாயகத்தின் பெயரில் புதிதாக அருள்செல்வநாயகம் வாசகர் வட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக பா.ஜெகதீஸ், செயலாளராக சீ.ரவிந்திரன், பொருளாளராக க.சுதர்சனன், உபதலைவராக பி.கார்த்திகேயன், உபசெயலாளராக த.பிரதீஸ், கணக்காய்வாளராக செ.டிலோஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த வாசகர் வட்டத்தின் ஊடாக மாணவர்கள், இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் வீட்டுக்கு ஒரு புத்தகம் சேகரிக்கும் பணியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. (நி)







