புதிய அரசியலமைப்பு தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நேற்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்றின் சபை அமர்வுகள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையில், புதிய அரசியல் அமைப்புக்கு என்ன நடந்தது? என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று முன்வைத்த பிரேரணை மீது இன்று இறுதி நாள் விவாதம் இடம்பெறுகின்றது.
நேற்றையதினம் பாராளுமன்றில் குறித்த பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழர்கள் விடயத்தில், சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.
சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்து தற்போது 10 வருடங்கள் கடந்தபோதும் தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்றும், தற்போது தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்ததுடன், இவ்வாறு தொடர்ச்சியாக தமிழர்கள் இருந்துவிட முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இரண்டாம் நாள் விவாதம் இன்று ஆரம்பித்துள்ளது.
2016ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எனினும் தற்போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையிலேயே, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கூட்டமைப்பு சபையில் விசேட பிரேணையை சமர்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)