முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து, பௌத்த விகாரையை அமைத்து, சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியில், இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது சிங்கள பௌத்த மக்களுடைய விகாரை, இதை எமக்கு தர வேண்டும். அரசியல்வாதிகளுடைய, பயங்கரவாத தமிழ் மக்கள் குழுவுடைய குழப்பங்கள் காரணமாக, விகாரையில் குழப்பம் நிகழ்கிறது.இந்த விடயமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கரிசனைகொண்டு, விகாரையை பெற்றுத்தர வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில், பல இடங்களில் இருந்து வருகை தந்த பிக்குகள் மற்றும் கொக்குளாய், மணலாறு, புல்மோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த சிங்கள மக்கள் இணைந்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, அத்துமீறிய விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில், தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளவும், அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கவும், மாவட்ட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்ததுடன், இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் கட்டளையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.