இலங்கை மற்றும் பிரித்தானியாவிற்கிடையில் நிலவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்தும் வழங்குவதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல்குணரத்ன உறுதியளித்துள்ளார்.
கொழும்பிலுள்ள உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடைமையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கேர்ணல் டேவிட் அஷ்மான், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இதன் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு உறுதியளித்திருந்தார். இந்த சந்திப்பு நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றதோடு இதில், புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள கேர்ணல் போல் கிளேட்டனும் கலந்து கொண்டார்.
சந்திப்பின் போது, இலங்கையில் தான் கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக கேர்ணல் அஷ்மான் பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றி தெரிவித்தார். பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகரின் சேவையை பாதுகாப்பு செயலாளர் பாராட்டியதுடன், அவரது எதிர்கால செயற்பாடுகள் வெற்றிகரமாக அமையவும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையே நிலவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த தனது முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்தும் வழங்குவதாக உறுதியளித்த பாதுகாப்பு செயலாளர், புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள கேர்ணல் கிளேட்டனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பதவிக் காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகருக்கு, அவரின் சேவையைப் பாராட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றையும் பாதுகாப்பு செயலாளர் இந்த சந்திப்பின்போது வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!








