தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா, இன்று காலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.
ஜப்பானில் நடைபெறவுள்ள, ஜி20 அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் நோக்கி பயணித்த அவர், இலங்கைக்கு குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
தென்னாபிரிக்க விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில், காலை 10.20 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன், 20 பேர் அடங்கிய குழுவினரும் வருகை தந்திருந்தனர்.
இதன் போது, தென்னாபிரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
அதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கும் இடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறுகிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, விமானத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொண்டு, மதியம் 12.00 மணியளவில், தென்னாபிரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், ஜப்பான் நோக்கி பயணித்தனர். (சி)








