2015 ஆம் ஆண்டு, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்துவதற்காக வாக்களித்த, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அவரை ஆதரித்து வாக்களிப்பார்கள் என, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்று, பொதுஜன முன்னணியின் தேர்தல் ஒப்பந்த கைச்சாத்தின் பின்னர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
‘இம்முறை எமக்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் கிடைக்கும் என்பதோடு, கத்தோலிக்க மக்களினதும் 100 வீதம் கிடைக்கின்ற வாய்ப்புக்கள் இருக்கின்றன.
ஏனென்றால் அவர்களுக்கும் பாதுகாப்பு அவசியம். கடந்த முறை சிங்கள மக்களின் வாக்குகளினால்தான் நாங்கள் தோல்வியடைந்தோம்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களில் 90 வீதமான வாக்குகள் எமக்கு எதிராகவே அளிக்கப்பட்டிருந்தன. அந்த அனைத்து வாக்குகளிலும் தற்போது பிளவுநிலை ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நாட்டில் பாதுகாப்புக்கான கேள்வி அதிகரித்துள்ளது. பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளது.
அதேபோல கம்பஹா போன்ற சிங்கள மாவட்டங்களிலும் நாங்கள் கடந்த முறை தோல்வியடைந்திருந்தோம்.
ஆனாலும் தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சாதாரணமாக கத்தோலிக்க மக்களின் வாக்குகளும், தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் எமது பக்கம் சார்ந்திருக்கின்றன.
இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அல்லது இந்நாள் ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்பை கொண்டுவந்து எமக்கு எதிராக போட்டியிட வைத்தாலும்கூட எமது வெற்றி நிச்சயமாகும்’ . என குறிப்பிட்டுள்ளார். (சி)