சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வேவ ஆரம்ப பாடசாலையை மீள திறக்குமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

கொத்மலை பூண்டுலோயா பிரதான வீதியின் மல்வேவ ரஜ்கம சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 100ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பெற்றோர்….

‘மல்வேவ ஆரம்ப பாடசாலையில் சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காணப்படுகிறது. அதனால் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த 5 நாட்களாக பாடசாலை மூடப்பட்டு, மல்வேவ விகாரையில் தற்காலிகமாக கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், அங்கு பல அடிப்படை பிரச்சினைகள் காணப்படுகிறது.

அந்த விகாரையின் மரங்களுக்கு கீழும், தர்ம போதனை நடைபெறும் மண்டபத்தின் தரையிலும் அமர்ந்து மாணவர்கள் கற்க வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.

பாடசாலை அமைந்துள்ள வளாகம் வனப்பகுதி என்பதாலும் பாடசாலைக்குரிய வளங்கள் இல்லாமையாலும் பல்வேறு சிரமங்களை மாணவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

இதனை கருத்திற் கொண்டு மாணவர்களை வேறு பாடசாலையில் சேர்ப்பதற்கு அனுமதிக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இம்முறை புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் நடமாடும் சிறுத்தைகள் காரணமாக விலங்குகள் பல காணாமல் போயுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கொத்மலை வலய கல்வி பணிமனைக்கும், நுவரெலியா வன விலங்கு உத்தியோகத்தர்களுக்கும் அறிவித்தும் இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை. மாணவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.உரிய பதில் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். என பெற்றோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.(சி)

Previous articleசிங்கள இராச்சியம் உருவானால் தமிழ் இராச்சியம் உருவாகும் : சிறிகாந்தா
Next articleமுஸ்லிம் இளைஞர்களுக்கு பிணை வழங்காதீர்கள் : அத்துரலிய தேரர்