சட்டவிரோத மரக்கடத்தலை தடுக்கும் முகமாக, வவுனியாவில் பொலிஸரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக சட்ட விரோத மரக்கடத்தலுக்கு எதிராக, பொலிசார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது 3 வாகனங்களுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்பட்ட விஷேட பொலிஸ் பிரிவு, கடந்த மூன்று தினங்களாக வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிக்குளம், புதூர், பூவரசங்குளம், அனந்தர் புளியங்குளம் பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புக்களின் போது 20 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை குற்றிகள் 35 மற்றும் தேக்கங்குற்றிகள் 15 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரஊர்தி, பட்ட ரக கப் வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன், 9 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நீண்டகாலமாக மரக்கடத்தலில் அவர்கள் ஈடுபட்டுவந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)








