2008 ஆம் ஆண்டு, கருணா குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு, சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகசந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை தேடி, நிலத்தை தோண்டும் நடவடிக்கைகள்இரண்டாவது தடவையாகவும், இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, முனைக்காடு பொது மயானத்தில் புதைக்கப்பட்டதாககைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, இந்த தோண்டும் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா குழுவின் உறுப்பினர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலத்தை தோண்டும் நடவடிக்கை, கடந்த மாதம் 11 ஆம் திகதி மாலை நடாத்தப்பட்டன.
அன்றையதினம் எந்தவித சடலங்களும் மீட்கப்படாத நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் இன்று வியாழக்கிழமை மாலை சடலத்தை தோண்டும் நடவடிக்கைகள், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2008 ஆம் ஆண்டு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த, கிரான்குளத்தைச் சேர்ந்த, 25 வயதுடைய நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் இருந்து, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையை மேற்கொள்வதற்காக, பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையிலேயே, அவர் காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில், காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில், கருணா குழுவின் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை, சந்தேகத்தில் ஓட்டமாவடி, களுவாஞ்சிகுடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து, கடந்த மார்ச் மாதம் குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரனையில், காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு, கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக, குற்றப்புலனாய்வுத் துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதனையடுத்து, குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு, சி.ஜ.டி சப் இன்பொஸ்டர் என்.நவரெட்ண, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், கடந்த மே மாதம் 23 ஆம் திகதி அனுமதி கோரியிருந்தமையின் அடிப்படையில், சடலத்தை மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், எந்தவிதமான எச்சங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில், கபிலன் எனப்படும் சந்தேக நபர் ஏலவே இறந்துள்ளதுடன், இனியபாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருப்பதாதாவும், ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் எனப்படுபவர், கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக, நிலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
நிலம் தோண்டப்படும் இடத்திற்கு, தயானந்தன், மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகியோர் அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. (சி)












