குவைத் நாட்டு மக்களின் நன்கொடையினால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில், போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில், சுகாதார மற்றும் சுதேச போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாவ் பூ தாஃயர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் வழிகாட்டலின் கீழ், குவைத் நாட்டின் மக்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 530 மில்லியன் ரூபா நிதியில், கடந்த வருடம் யூலை மாதம் இக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

சுமார் 11 மாதங்களில், புதிய செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்திற்கான 3 மாடிக்கட்டடம் அமைக்கப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டது.

குவைத் நாட்டின் செம்பிறை சங்கத்தின் தலைவர் வைத்தியக்கலாநிதி ஹிலால் முசேட் அல் சேயரினால், சுகாதார மற்றும் சுதேச போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளிக்கப்பட்டு, மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர், யாழ். போதனா வைத்தியசாலையில், இந்த செம்பிறை மீள்வாழ்வுச் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்த மாவட்டத்திலும் இல்லாத, அதி சிறந்த சிகிச்சை முறைகளுடன், இந்த செம்பிறை மீள்வாழ்வுச் சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் உட்பட யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள், குவைத் நாட்டின், அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.(சி)

Previous articleயாழில், குளவிகள் தாக்கியதில் ஒருவர் பலி
Next articleமட்டு. பூநொச்சிமுனை மீனவர்கள், தொழில் தவிர்ப்பு போராட்டம்