கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிதாக உருவாக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவேண்டும், கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள பெரும்பான்மை இனத்தைச் செர்ந்த மாணவர்கள் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தி கோஷமிட்டவாறு வளாகத்திலிருந்து பேரணியாக வந்து வீதியோரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் களுவன்கேணி விடுதியிலுள்ள மாணவர்களுக்கான போக்குவரத்துச்சேவை சீராக்கப்படுவதுடன் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.
மேலும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தை அரசாங்கம் சுவீகரித்து அனைத்து இன மாணவர்களும் கல்வி பயிலுக்கூடிய மத சார்பற்ற பல்கலைக்கழகமாக இயங்கச்செய்யவேண்டும் ஆகியன ஆர்ப்பாட்டக்காரர்களது கோரிக்கைகளாகும்.



