மட்டக்களப்பு வாகரை வட்டார வன அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள கதிரவெளி காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் துப்பரவு பணியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் அதற்கு பயன் படுத்திய கனரக வெக்கோ இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி சு.தனிகாசலம் தெரிவித்தார்.

கடந்த திங்கள்கிழமை குறித்த காட்டு பிரதேசத்தில் கனரக இயந்திரத்தின் உதவியுடன் காடு அழிக்கப்பட்டு துப்பரவு பணி மேற்கொள்ளப்படுவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தமது உத்தியோகஸ்த்தர்கள் சகிதம் சென்று அவர்களை கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.

இதன் போது சந்தேக நபர் மற்றும் வெக்கோ இயந்திர சாரதியும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் வெக்கோ இயந்திரம் எனபன வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி எம்.எச்.எம்.பஷில் முன்னிலையில் நேற்று செவ்வாய்கிழமை ஆஜர்படுத்திய போது தலா 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த இயந்திரம் மேலதிக் விசாரணைக்காக நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, வட்டார வன அதிகாரி சு.தனிகாசலம் தெரிவித்தார்.

அத்துடன், அன்றையதினம் வாகரை திருமலை வீதியில் அனுமதிப் பத்திரம் இன்றி முதிரை மரங்களில் செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த பொருட்களை கொண்டு சென்ற வாகனம் மற்றும் 2 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது சந்தேக நபர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

முதிரை மரங்களில் செய்யப்பட்ட பொருட்களை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரமே அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டு செல்ல முடியும் எனவும், வட்டார வன அதிகாரி தெரிவித்தார். (சி)

Previous articleமட்டு. மங்களகம கிரம பாலம் கம்பெரலிய திட்டத்தின் கீழ் மீளமைப்பு
Next articleஜேர்மன் உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு விஜயம்! (படங்கள் இணைப்பு)